மாறன் சகோதரர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும்
கலைஞர் தன்னுடைய மனசாட்சியாகக் கருதிய முரசொலி மாறனின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக மாறன் சகோதரர்களுக்கு செய்தஉதவிகள் ஏராளம்.
கலைஞர் மாறன் சகோதரர்களின் அளவில்லாத நம்பிக்கை துரோகங்களையும், திமுகவுக்கும், தனக்கும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதிராக அவர்கள் திட்டமிட்டு செய்து வந்த சதிச் செயல்களையும் பெருந்தன்மையோடும் சில சமயம் வேதனையோடும் சகித்து வந்தார்.
1993 இல் முரசொலியின் பழைய கட்டிடத்தை வங்கி அடமானம் வைத்து சுமார் மூன்று கோடி கொடுத்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.
திமுகவில் கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலினுக்கே தரப்படாத மரியாதையாக அரசியலில் அடி எடுத்து வைத்தவுடனேயே தயாநிதிமாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
முப்பது வருடங்களாக அரசியலில் மும்முரமாக பணியாற்றி, பட்டிதொட்டி எங்கும் பம்பரமாகப் பயணப்பட்டு கட்சிப் பணியாற்றி,
இந்திராகாந்தி அம்மையாரின் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்று `மிசா' கொடுமைகளையெல்லாம் அனுபவித்து மீண்ட தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு முன்னரே தயாநிதியை அமைச்சராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும்போதே மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவி தயாநிதி மாறனுக்கு வழங்கி மகிழ்ந்தார் கலைஞர்.
தயாநிதி இவ்வாறாக கலைஞரின் பெருந்தன்மையை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அரசியலில் வெகு திறமையாக காய் நகர்த்தி முன்னேறி வந்தது போலவே கலாநிதி தனது தொழிலில் வெற்றிக் கொடி நாட்டினார்.
திமுகவின் நிழலில் கலைஞரின் அரவணைப்பில் சன் குழுமம் மிகப் பலமாக வேரூன்றி வளந்தது, கலாநிதியின் தந்திரங்கள் மறைமுக திட்டங்கள் பலவற்றில் சில கலைஞரின் பார்வைக்கு வந்த போதும் முரசொலி மாறனை எண்ணி அவர் பொறுமை காத்தார்.
இந்தக் காலகட்டத்த்தில் சன் குழுமம் 14 தொலைக்காட்சி அலைவரிசைகள் , 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 பண்பலை வானொலி நிலையங்கள் என தான் கால் பதித்த எல்லாத் துறைகளிலும் அசுரத் தனமாக வளர்ந்தது.
சன் தொலைக்காட்சி பப்ளிக் லிமிட்டெட் கம்பனியாக 2005 முதல் அறிவித்துக் கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த பங்குகள், அவற்றின் மதிப்பு போன்ற வற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதிமாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
அதன்படி சன் தொலைக் காட்சியில் கலாநிதிமாறனின் 90 சதவீத பங்குகளின் மதிப்பு அப்போதைய பங்குச் சந்தை நிலைவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,765 கோடி...!
அதாவது இது அதிகாரபூர்வமான சட்டப்படியான சன் தொலைக்காட்சியில் உள்ள கலாநிதி மாறனின் பங்கு மூலமான சொத்து மதிப்பு மட்டும் தான்.
இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவில் இருபதாவது பணக்காரராக கலாநிதி மாறன் அறிவிக் கப்பட்டார். ஆனால், சன் குழுமம் தவிர்ந்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
தினகரன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள், எஸ்.சி.வி, 45 பண்பலை வானொலி நிலையங்கள், கோல் கேபிள்ஸ், கோல் கம்யுனிகேஸன்ஸ், டி.எம்.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், டி.கே. எண்டர்பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்களாகவும் மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்குதாரர்களாகவும் கொண்டு நடத்தி வருகிறார்.
இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.
மாறன் சகோதரர்களின் இக்தகைய எந்த ஒரு நிறுவனத்திலும் கலைஞரின் இரத்த உறவுகள் யாரையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளவில்லை இந்த சதிகார மாறன் சகோதரர்கள்.
மாறன் சகோதரர்கள் தங்கள் சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாக வுள்ளதால் கலைஞரின் மகள் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளனர்.
முரசொலி மாறனின் சொந்தத் தம்பியான இந்த முரசொலி செல்வம் தான் தற்போது மாறன் சகோதரர்களைத் தீவிரமாக ஆதரிக்கிறார்.
ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாரராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர்.
ஆனால், காலப்போக்கில் இவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக எப்படி கழற்றி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை.
நவம்பர் 2005 இல் அதிகாரபூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவீத பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டு விலகினார் என செய்தி வெளியானது.
வேகமாக வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கிக் கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்ற தகவல் இதுவரை தெரியவரவில்லை.
ஆனால், சன் குழுமம் ஆலமரமாய் வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டு போகும் நிலையில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கலைஞரின் குடும்ப உறவுகளுக்கு எந்தப் பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்.
முரசொலி மாறனை எண்ணி, மாறன் சகோதரர்களால் தனக்கும், திமுகவினருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும் பல நேரங்களில் பெருந்தன்மை யாகவுமிருந்தார் கலைஞர்.
தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கலைஞர். அதை கலாநிதி மாறனின் குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதிக் கொடுத்தார். ஆனால், அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப்படுத்தினார் கலாநிதிமாறன்.
கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி பல்வேறு வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
மாறன் சகோதரர்கள் தன்னையே உதாசினப் படுத்திய போதும் கலைஞர், மாறன் சகோதரர்கள் விசயத்தில் பொறுமை காத்தே வந்தார்.
இவை மட்டும் அல்லாது,
சன் செய்திகளில் பல நேரங்களில் கலைஞரின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத் துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது,
கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை ஒளிபரப்பாதது,
பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும், அறிக்கைகளையும் கூடுமானவரை ஒளிபரப்பாமல் தவிர்த்தது,
கனிமொழி `கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியபோதும் இருட்டடிப்பு செய்தது,
கலைஞருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது,
கலைஞர் சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்திப் பிரிவிலோ அல்லது வேறு பிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கலாநிதி மாறன் கடைப்பிடித்து வந்தது,
இப்படி எல்லாம் செய்து மாறன் சகோதர்கள் திமுகவினரையும், கலைஞரின் குடும்பத்தினரையும், கடைசியில் கலைஞரையுமே மதிக்காமல் நடக்க ஆரம்பித்தது எதனால் என்று பார்த்தால் சன்டிவி தொடங்கிய பிறகு திமுகவிற்கு கிடைத்த வெற்றிகள் அனைத்தும் தங்களாலேயே கிடைத்தது என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டதுதான்.
1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க. வின் வெற்றிக்கு சன் தொலைக் காட்சியின் பலம் தான் காரணம் என்று கருதினர் மாறன் சகோதரர்கள்.
பெருவாரியான பார்வையாளர்களை தன்வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், விவாதங்கள் போன்றவை தி.மு.க. வின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது உண்மையே, ஆனால் அந்த வெற்றிக்கு முழுக் காரணமும் தாங்கள்தான் என்று கருதினர் மாறன் சகோதரர்கள். .
கலைஞர் 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை சன் தொலைக்காட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது என்றும் கருதினர் மாறன் சகோதரர்கள்.
கலைஞரின் காலடி தடம் பட முடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சன் டிவி தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது என்றும்,
சன் குழுமத்தின் பிரசார பலமில்லாமல் தி.மு.க.வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாதென்றும்
மாறன் சகோதரர்கள் மனக்கணக்குப் போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்துப் போவதைத் தவிர கலைஞருக்கு வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். அதனாலேயே அவர்கள் தலை கால் புரியாமல் ஆட ஆரம்பித்தனர்.
சன் குழுமத்தின் ஆரம்பம் தொடங்கி அதன் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் கலைஞரின் பங்கிருந்தது.
கலைஞரின் அரவணைப்பு, பண உதவி, அரசியல் பலம் போன்றவை மாறன் சகோதரர்களின் விஸ்வரூப வளர்ச்சிக்கு விதையாய், நீராய் உதவியது என்பதை அவர்கள் பெற்ற அளப்பரிய செல்வாதாரமும், சிரமமில்லாமல் கிடைத்த அதிகார பலத்தால் பெற்ற ஆணவமும் சேர்ந்து மாறன் சகோதரர்களை மறந்துவிடச் செய்து விட்டன.
இந்தியப் பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மாநில முதல்வர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்களோடு தயாநிதிமாறனுக்கு பழகக் கிடைத்த வாய்ப்புகள் அவரை தலை, கால் தெரியாமல் புரட்டிப்போட்டது.
மாறன் சகோதரர்களின் கால்கள் யதார்த்தம் என்ற தரையைத் தொட மறுத்தது.
மரம் வேரை மறந்தது.
அளப்பரிய செல்வமும் அதிர்ஷ்டமுமாய் வந்த அதிகார பலமும் மாறன் சகோதரர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை,
கலைஞரின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி மாறன் இருக்க, அதற்குத் தடைக்கற்களாக மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் இலட்சியத்திற்கு இடையூறாக கருதினார்கள்.
ஓரணியில் ஒன்றாக இருக்கும் மு.க.ஸ்டாலினையும், மு.க.அழகிரியையும் பிரிப்பது,
இருவரையும் ஒருவருக்கொருவர் எதிராய் மாற்றுவது,
தினகரனில் கலைஞரின் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை கலைஞரின் எச்சரிக்கையையும் மீறி வெளியிடுவது,
அந்தக் கருத்துக் கணிப்பின் விளைவாய் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்து, அப்படி அவர்கள் செய்யும் வன்முறைகளை அடிப் படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது,
போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.
மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வி. யின் ஏகபோகத்தை தடுத்து சிறு கேபிள் ஆப்பரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக மு.க.அழகிரி செயற்படுவதும் மாறன் சகோதரர்களின் கட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.
மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு மு.க.அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயற்படுகிறார் என்று மீண்டும் மீண்டும் ஓலமிட்டன சன் தொலைக்காட்சியும், தினகரனும்.
அரசியலில் இலாபமும், நஷ்டமும் சகஜமே. ஆனால், கலைஞரின் தயவால் இலாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், முதன்முறையாக நஷ்டத்தை கண்டு கதி கலங்கி குமுறி தீர்த்தனர்.
அழகிரியை சிறைக்குள் தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....' என மார்தட்டினார்கள்.
அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமமாக இருக்கலாம். ஆனால் அதை தூண்டி விட்டது யார்?
தனது தலைவன் அவமானப் படுத்தப் படுவதை எதிர்த்து அமைதியாக அறவழியில் மட்டுமே போராட வேண்டும் என்பதை எல்லாத் தொண்டர்களிடமும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?
தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டால் பிரச்சினை வெடிக்கும் எப்று கலைஞர் எச்சரித்த பின்னும் அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட மாறன் சகோதரர்களின் நோக்கம் என்ன?
மு.க.அழகிரியை எதிர்த்து நல்லவர்கள் என்று வேடம் போட்டுக் கொள்வதற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி என்ன இருக்கிறது.
கலைஞர் தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னைக் கடந்து சென்று தன் மகன் மு.க.அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது அறிவுக்கும் அனுபத்திற்கும் விடப்பட்ட அறைகூவலாகத் தான் எதிர்கொண்டார்.
தன்னைத் தவிர தாங்கிப் பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை.
கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக் கிடந்தது. அது அவர்களை கலைஞர் கைவிட்ட பின்பு நிர்வாகக் குழுவில் பொங்கி பிரவகித்தது.
மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க. திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது.
நன்றி - அற்விழி வலைப்பூ
0 பின்னூட்டங்கள்:
Post a Comment