Saturday, December 13, 2008

தமிழக சுற்றுலாத் துறைக்கு 3 விருதுகள் : அமைச்சர் சுரேஷ்ராஜன் பெருமிதம்!

செய்தி 1

கோவை : "சிறப்பாக செயல்பட்டதற்காக, மூன்று விருதுகளை தமிழக சுற்றுலாத் துறை பெற்றுள்ளது' என, சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். "விருந்தோம்பல் 2010' தேசியக் கருத்தரங்கு, கோவை நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை சார்பில், நேற்று, துவங்கியது.


கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:திருக்குறளில் கூறப்பட்டுள்ள விரும்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழக சுற்றுலாத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 2005ம் ஆண்டில் 3.46 கோடி, 2006ல் 4.05 கோடி, 2007ல் 5.24 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.தேசிய அளவில், 2007ம் ஆண்டில் மட்டும், சுற்றுலா வளர்ச்சி 29.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.தமிழக சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறைக்காக 49 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சிறப்பாக செயல்பட மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிக அவசியம். தமிழகத்தில் வால்பாறை, ஏலகிரி, கொல்லிமலை, சிறுமலை, செட்டிநாடு, தரங்கம்பாடி ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

செய்தி - 2

கோவை : ""மும்பை தாக்குதல் காரணமாக, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்று சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், "சுற்றுலா அலுவலகம்' நேற்று திறக்கப்பட்டது. தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி திறந்து வைத்தார்.சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, கலெக்டர் பழனிகுமார், வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கம் உட்பட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.


விழா முடிந்த பின், சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் அளித்த பேட்டி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஓட்டல்களை மேம்படுத்த, கடந்த இரு ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, சுற்றுலாத் தலங்களில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.தமிழகத்திலுள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்த, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலகம் என 14 சுற்றுலா அலுவலகங்கள் செயல்படுகின்றன. தவிர, திருவண்ணாமலை, கோவை, வேலூர் மற்றும் செட்டிநாடு ஆகிய நான்கு இடங்களில், முழு தகவல்களைக் கொண்ட சுற்றுலா அலுவலகம் திறக்கப்படுகிறது. தற்போது, கோவையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 17 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். இதே போல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 5.5 கோடி பேர் வருகை தந்துள்ளனர்.



மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக, தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஓட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது, நாளடைவில் சரியாகி விடும்.வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு போதிய வசதி இல்லை. இதை நிவர்த்தி செய்ய, ஒரு ஏக்கர் பரப்பளவில் "யாத்ரா நிவாஸ்' எனும் விருந்தினர் மாளிகை, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். வால்பாறையில் படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இதற்கான திட்ட மதிப்பீடு, கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும். தற்போது, கோவை, குற்றாலத்தில் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்கா அமைப்பு, பார்வையாளர் மாடம், நீரோடையின் குறுக்கே நடைபாதை அமைத்தல், தகவல் பலகை அமைத்தல் பணிகள் நடந்து வருகின்றன.டாப்சிலிப் இந்திரா காந்தி புலிகள் காப்பக மேம்பாட்டுக்காக, ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பார்வையாளர் மாடம், பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், 68 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓய்வு அறைகள் கட்டும் பணி நடக்கிறது.இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.



பொங்கலுக்கு கோவையில் "சங்கமம்' : அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், ""கோவை மாவட்டமானது, சுற்றுச்சூழல், செழிப்புடன் கூடிய பல சுற்றுலா மையங்களைக் கொண்டுள்ளது. வால்பாறை, மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. இங்கு, அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டுமென்பதற்காக, கோவையில் சுற்றுலா அலுவலகம் திறக்கப்பட்டு, தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டுப்புறக் கலைகள் அழியாமல் பாதுகாக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், சென்னையில் "சங்கமம்' நிகழ்ச்சி நடந்தது. வரும் பொங்கல் விடுமுறையின் போது, கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என்றார்.


0 பின்னூட்டங்கள்:

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP