மறக்க முடியாத சாதனை: ஸ்டாலின் பெருமிதம்!!
ராமநாதபுரம் : உள்ளாட்சித்துறை சார்பில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாதனை என கருதுவது ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் தான் என தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சுழல்நிதி , நலத்திட்ட உதவிகள், கட்டடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் மற்றும் 480 கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது :
616 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஏப்ரலில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என அதிகாரிகள் கூறினர். வரும் ஜனவரியில் திட்டம் செயல்படவேண்டும் என கேட்டுள்ளேன். தமிழர் திருநாள் அன்று திட்டம் துவக்கி வைக்கப்படும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொள்வார்.
வங்கிகள் மூலம் 4 லட்சம் குழுக்களுக்கு 3 ஆயிரத்து 811 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. சுயஉதவிகுழக்களின் பரிமாற்றத்துக்காகவே இந்தியாவில் 16 இடங்களில் கிளைகள் துவங்கப்பட உள்ளன. அதில் 10 கிளைகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது.
மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தொடர்ந்து இந்த அரசு பல உதவிகளை வழங்கும்.இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்ட போது அதனை வரவேற்றவர்கள் தற்போது குறை கூறுகிறார்கள். ஆனால் ரேஷன்கடைகளில் அரிசி மட்டுமன்றி 50 ரூபாயில் மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் தங்கவேலன் தலைமை வகித்தார். கலெக்டர் கிர்லோஷ்குமார் வரவேற்றார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜகண்ணப்பன், முருகவேல், ஹசன்அலி, ராம்பிரபு, மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, ஒன்றியக்குழு தலைவி கலைமதி , நகராட்சிதலைவி லலிதகலா பேசினர்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment